• தமிழ்தேசியமும் அதற்கான தேவையும்
இந்த பதிவு உங்களில் பலரையும் கோபத்திற்கு உள்ளாக்கலாம். ஆனால் சிலவற்றை உடைத்து பேசலாம் என தோன்றுகிறது.
இன்றுவரை தமிழ்தேசியவாதிகளுக்கும் , திராவிடவாதிகளுக்கும் நடக்கும் விவாதங்களை எடுத்துகொள்ளுங்கள். அதனது வடிவம், உள்ளடக்கம் , தன்மை எல்லாம் எப்பொழுதும் ஒரே மாதிரிதான் இருக்கும்.
திரும்ப திரும்ப, பெரியார் இந்த ஆண்டில், இந்த இடத்தில் , இப்படி பேசினார் என்பதற்கான ஆதாரம் இந்த பெயருள்ள நூலில் , இத்தனையாவது பக்கத்தில் இருக்கும் என ஒரு குரூப் சொல்லும்.
அதை எதிர்த்து மற்றைய குரூப் ‘ இல்லை. இல்லை. அதற்கு பிறகான காலங்களில் பெரியார் இப்படித்தான் பேசினார்’ என திரும்பவும் இந்த ஆண்டில், இந்த இடத்தில் என ஆரம்பித்து வேறொரு நூலின் பெயர், பக்கங்களை ஆதாரமாக தரும்.
மறுபடியும் முதல் சொன்ன குரூப், ‘ஆனால் பெரியார் அப்பொழுதே இப்படி சொல்லியிருக்கிறார்’ என பழைய பத்திரிகை , திரும்ப இன்னொரு நூல், இத்தனையாவது பக்கம் ....
இதை பார்க்கும் நமக்கு, நீதிமன்றத்தில் வழக்கொன்றிற்குள் அகப்பட்ட உணர்வுதான் கிடைக்கும். இவற்றிற்கு இடையில் நூலின் பெயர், பக்கத்தின் எண்களை வேறு நாம் பாடமாக்கி கொள்ளவேண்டும்.
இதுதான் தமிழ்தேசியத்திற்கும் திராவிடத்திற்கும் இத்தனை காலம் நம் கண் முன்பு நடக்கும் கருத்தியல் சண்டையின் வடிவம்.
இந்த பெரியார் , நூல் பெயர், இத்தனையாவது பக்கம் என்பதை கொஞ்ச நேரம் மறந்துவிடுங்கள்.
சில விடயங்களை மிக சுருக்கமாக, எளிமையாக, வரிசையாக பார்ப்போம்.
• தமிழ்தேசியம் என்றால் என்ன?
தமிழ்நாடு எனும் நிலப்பரப்பில், வரலாற்றுரீதியாக தொடர்ச்சியாக வாழ்ந்துவரும் தமிழர் எனும் இனம் தனக்கென இறையாண்மையுள்ள ஒரு அரசை இந்த உலக ஒழுங்கில் அமைத்து கொள்வதற்கான அரசியல் கருத்தியல்தான் தமிழ்தேசியம்.
• தமிழ்தேசியத்திற்கு இந்தியாவில் தேவை உண்டா?
அது நீங்கள் வைத்திருக்கும் அரசியல் பார்வை, அணுகும் முறை என்பவற்றை பொறுத்தது.
இந்திய தேசியமே எங்களுக்கு போதுமானது . இதில் ஒவ்வொரு தேசிய இனங்களின் அரசியல் அதிகாரம், மொழி , பண்பாடு , அடையாளம், தனித்துவம் எல்லாம் இரண்டாம் பட்சம் என நினைப்பவர்கள் இந்த பந்தியோடு நிறுத்திகொள்ளலாம். இதற்கு மேல் நீங்கள் வாசிக்கும் அவசியமில்லை.
தேசிய இனங்களிற்கான அரசியல் அதிகாரம், மொழி இத்யாதி இத்யாதி எல்லாமும் முக்கியம் என நினைப்பவர்கள் தொடருங்கள்.
இந்தியா பல தேசிய இனங்களை கொண்டது. இங்கு அரசியல் அதிகாரம் என்பது எண்ணிக்கை அடிப்படையிலானது. இங்கு ஒரு குழு அல்லது ஒரு இனம் உச்ச அதிகாரத்தையும், தேசிய செல்வத்தை எப்படி பங்கிடுவது என்பது தொடர்பான அதிகாரத்தையும் தம் கையில் வைத்திருப்பது வெளிப்படை.
இந்த ஒரு குழு என்பதை உங்கள் மொழியில் சொல்லபோனால் ஆரியர் , பிராமணர், வடவர் என எதுவாகவும் இருக்கலாம். ஆனால் அந்த குழுவின் கையில் அதிக அதிகாரங்கள் குவிந்திருப்பது உண்மை.
பல இனங்களை கொண்ட நிலப்பரப்பில் , அரசியல் அதிகாரம், தேசிய செல்வத்தை பங்கிடுதல் தொடர்பாக , காலவோட்டத்தில் இனங்களுக்கு இடையே முரண்கள் தோன்றுவது தவிர்க்கமுடியாதது. அதை எதிர்கொள்ளும் விதமாக பெரும்பாலான அரசுகள் மறைமுகமாக ஒருவித ஒற்றைதன்மையை கொண்டுவர முயல்கின்றன.
இதை கொண்டுவர cultural assimilation ஐ நடைமுறைபடுத்துகின்றன (Cultural assimilation is the process in which a minority group or culture comes to resemble a dominant group or assume the values, behaviors, and beliefs of another group).
அரச அதிகாரத்தின் ஊடாக ஒற்றை மொழியை அரச மொழியாக, நிர்வாக மொழியாக மாற்றுதல் எல்லாமே இந்த cultural assimilation இல் ஒரு பகுதிதான்.
உதாரணமாக கனடா , Canadian Indian residential school system என்ற திட்டத்தினூடாக நூறு வருடங்களாக , அதாவது 1990 கள் வரை , அந்த நாட்டின் பூர்வீக குடிகளை வலுக்கட்டாயமாக assimilate செய்தது(Forced assimilation of Indigenous peoples)
The school system was created for the purpose of removing Indigenous children from the influence of their own culture and assimilating them into the dominant Canadian culture, "to kill the Indian in the child."
இன்னும் பல நாடுகளின் உதாரணங்கள் உண்டு.
இதுபோன்ற பல இனங்கள் உள்ள நாடுகளில் , ஒரு இனத்தின் மேலாண்மையை நிறுவ , எதிர்கால மோதல்களை தவிர்க்க இத்தகைய assimilation திட்டங்களை அரசுகள் முன்னெடுக்கின்றன.
இந்தியாவில் இது நடக்கின்றதா என்றால் ஆமாம் நடக்கின்றது. முன்பு காங்கிரஸ் காலத்தில் வாழைபழத்தில் ஊசி ஏற்றுவதுபோல இந்த ஒற்றைதன்மையை கொண்டுவர முயன்றார்கள். இன்று பாஜக காலத்தில் வெளிப்படையாக கொண்டுவருகிறார்கள். அவ்வளவுதான். இந்தி திணிப்பு எல்லாம் அதன் ஒரு பகுதி என்பது இப்போது உங்களுக்கு தெளிவாகியிருக்கும்.
சரி. இந்திய அரசின் இத்தகைய cultural assimilation திட்டங்களிலிருந்து , உங்கள் இனத்தின் அரசியல் அதிகாரத்தை, மொழியை, பண்பாட்டை உங்கள் வரலாற்று தாயகத்தில் பாதுகாப்பது என நீங்கள் முடிவு எடுப்பீர்களேயானால், நீங்கள் தமிழ்தேசியவாதியாக மாறுவது தவிர்க்கமுடியாததாகிறது. அவ்வளவுதான்.
இதற்கு பெரியாரை,அவர் கட்டுரை எழுதிய நூலை , அந்த பக்கத்தை எல்லாம் துணைக்கு அழைக்கவேண்டியதில்லை.
• தமிழ்தேசியத்தின் இலக்கு என்ன?
முதலில் இலக்குகளை படிமுறைகளாக வகுத்து கொள்வோம்.
1. குறுகியகால , குறுந்தூர இலக்கு
2. நீண்டகால , தொலைதூர இலக்கு
• குறுகியகால , குறுந்தூர இலக்கு
தமிழ்நாட்டை தமிழ்தேசிய கருத்தியலின் செல்வாக்கிற்குள் கொண்டுவருவது,அதிகாரத்தை அடைவது என்பது குறைந்த பட்ச , ஒப்பீட்டளவில் குறுகிய காலத்தில் அடையகூடிய குறுந்தூர இலக்கு.
இந்திய ஒன்றிய அரசின் ஒற்றைதன்மையாக்கும் திட்டத்திலிருந்து தமிழர்கள் தம்மை பாதுகாத்து கொள்வதற்கு , இந்த குறைந்த பட்ச அதிகாரத்தையாவது கைப்பற்றுவது அவசியம்.
• நீண்டகால , தொலைதூர இலக்கு
நீண்டகால இலக்கு என்பது இந்த உலக ஒழுங்கில் இறையாண்மையுள்ள தமிழர் அரசை அமைப்பதுதான்.
இது சாத்தியமா,அதற்கு வாய்ப்பிருக்கிறதா என்றால் காலம்தான் பதில் சொல்லவேண்டும்.
அத்துடன் இது தனியாக அலசபட வேண்டியதொன்று.
ஆக தமிழர்கள் தங்களுக்குள் கேட்டுகொள்ள வேண்டிய கேள்விகள் தமிழ் தேசியம் என்றால் என்ன?அதற்கான தேவை ஏன் எழுகிறது? அதை நோக்கி தள்ளும் காரணிகள் என்னென்ன? அவைகளின் இலக்கு என்ன? என்பவையே.
இவ்வாறு எளிய கேள்விகளை கேட்டு கொண்டாலே , தமிழ் தேசியம் தேவையா , இல்லையா என்பதற்கான விடை கிடைத்துவிடும்.
அதைவிடுத்து ஒவ்வொரு முறையும் பெரியார் இதற்கு என்ன சொல்லியிருக்கிறார் என்று , நூலின் பக்கத்தை தேடுவதில் இல்லை தமிழ்தேசியம்.
க.ஜெயகாந்த்
0 கருத்துகள்