முகநூல் பதிவு


• தமிழ்நாட்டின் ‘ஆரியத்திற்கு எதிரான அரசியல்’ என்பதன் கோமாளித்தனங்கள்



தமிழ்நாட்டில் தேசிய கட்சிகளை ஆதரிப்பவர்களை தவிர்த்து மற்றைய அரசியல் சித்தாந்தங்களை பின்பற்றுபவர்கள் அனைவரும் கோரஸாக உச்சரிக்கும் ஒரு சொல்லாடல்தான் இந்த ‘ஆரியத்திற்கு எதிரான அரசியல்’.


இந்த ஆரியத்திற்கு எதிரான அரசியல் என்று சொல்லிக்கொண்டு இவர்கள் எதிர்ப்பது யாரை?

சில மனிதர்களை.


• யார் அந்த மனிதர்கள்?


எச்.ராஜா,துக்ளக் குருமூர்த்தி, எஸ்.வி.சேகர், மதுவந்தி, சம்பத், ரங்கராஜ் பாண்டே இத்யாதி, இத்யாதி.


இன்னும் இந்த பட்டியலை விரிவாக்கினால் மோடி,அமித்ஷா, இத்யாதி என்று முடிவடையும்.


மேலேயுள்ள இந்த பட்டியலில் இருக்கும் மனிதர்களுக்கு எதிராகத்தான் தமிழ்நாட்டின் அத்தனை பேரும் துள்ளி குதித்து வீரவசனங்களை அள்ளி தெளித்து கொண்டிருப்பார்கள்.


• ஆக மேலேயுள்ள இந்த மனிதர்களை வீழ்த்தினால் ஆரிய மேலாதிக்கத்தை வீழ்த்திவிடமுடியுமா? 


அவ்வளவு பலவீனமாகவா ஆரியம் அதனது பொறிமுறையினை கட்டமைத்து வைத்திருக்கிறது?


இந்த பதிவில் ஆரியர் என்பது யார் என்ற ஆழமான விவாதத்திற்குள் நான் போக விரும்பவில்லை.அது இந்த பதிவின் மையப்புள்ளி அல்ல.


அதனால் ஆரியரின் மேலாதிக்கம் என்பதிலிருந்தே தொடங்குகிறேன்.


இந்த ஆரிய மேலாதிக்கம் என்பது மனிதர்களை மையப்படுத்தி வடிவமைக்கப்பட்டதல்ல.


ஆரிய மேலாதிக்கத்தின் உயிர்நாடி வேறு இடத்தில் இருக்கிறது.


• எங்கே இருக்கிறது ஆரியத்தின் உயிர்நாடி?


இந்திய ஒன்றிய அரசின் கட்டமைப்பிற்குள் ஆரிய மேலாதிக்கத்தின் உயிர்நாடி இருக்கிறது.


அந்த கட்டமைப்பை மிக சுருக்கமாக பின்வருமாறு வகைப்படுத்தலாம்.


1. இந்திய ஒன்றியத்தின் சட்டமியற்றும் அதிகாரம்


2. தனது தேசிய செல்வத்தை எப்படி பங்கிடுவது என்பதில் இந்திய ஒன்றிய அரசுக்கு இருக்கும் அதிகாரம்


3. நீதித்துறை 


4. இந்திய ஒன்றிய அரசு தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ‘அரசின் வன்முறை மீதான ஏகபோக உரிமை (State monopoly on violence)’


மேலேயுள்ள இந்த கட்டமைப்பில்தான் ஆரிய மேலாதிக்கத்தின் உயிர்நாடி பத்திரமாக பாதுகாக்கப்பட்டிருக்கிறது.


இங்கே மேலே விவரித்திருக்கும் இந்த கட்டமைப்பை இன்னும் சற்று விரிவாகவே பார்க்கலாம்.


1. இந்திய ஒன்றியத்தின் சட்டமியற்றும் அதிகாரம்


இது தேர்தல் அரசியலோடு தொடர்புடையது. அதன்படி இந்திய ஒன்றியத்தின் அரசியல் அதிகாரம் அதிக எண்ணிக்கையை கொண்ட மக்கள் கைக்குத்தான் வந்து சேரும். 


ஒரு வாதத்திற்காக தமிழ்நாடு எனும் மாநிலம் மட்டும் இந்தியாவை எதிர்க்கிறது என வைத்து கொள்வோம். எந்த காலத்திலும் தமிழ்நாட்டிற்கு அந்த இந்திய ஒன்றியத்தின் சட்டமியற்றும் அரசியல் அதிகாரத்தை ‘தனித்து’ அடையும் வாய்ப்பு கிடையாது.


ஆனால் பெரும்பாலான நேரங்களில் ஆரியத்திற்கு தனித்து அந்த சட்டமியற்றும் அரசியல் அதிகாரத்தை அடையும் எண்ணிக்கை பலம் இருக்கின்றது.


2. தனது தேசிய செல்வத்தை எப்படி பங்கிடுவது என்பதில் இந்திய ஒன்றிய அரசுக்கு இருக்கும் அதிகாரம்


ஒரு அரசின் ஒக்சிஜனே வரி,தீர்வைகள் என்பவை மூலமாக கிடைக்கும் வருமானம்தான். இதுதான் அதனது தேசிய செல்வம். இதன் மீதான ஏகபோக உரிமை என்பது மிக முக்கியமான விடயம்.


இந்த தேசிய செல்வத்தை எப்படி பங்கிடுவது என்று முடிவெடுக்கும் அதிகாரத்தையும் இந்திய ஒன்றிய அரசே வைத்திருக்கிறது.


இந்திய ஒன்றிய அரசிடம் ஜி.எஸ்.டியில் எங்களின் பங்கை தாருங்கள், இயற்கை பேரழிவு நிதியை கூட்டி தாருங்கள்,இத்யாதி என மாநில அரசுகள் கெஞ்சி கேட்பதையும் நாம் பார்க்கிறோம்.


இது எப்படி நடந்தது?

காலவோட்டத்தில் இந்திய ஒன்றிய அரசு தேசிய செல்வத்தை பங்கிடும் அதிகாரத்தை கொஞ்சமாக கொஞ்சமாக தனது முழு கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டது.


3. நீதித்துறை


உச்ச நீதிமன்றத்தை அசைக்கமுடியாது என பீற்றிக்கொண்டிருக்கும் ஒரு கூட்டம் உண்டு. ஆனால் உச்ச நீதிமன்றத்தையும் தனக்கேற்றவாறு வளைக்கமுடியும் என்பதை பாஜக அரசு கடந்த ஏழு வருட கால ஆட்சியில் நிருபித்து காட்டிவிட்டது.


ஆக சட்டமியற்றும் அதிகாரத்தையும் ஆரியம் தன் கையில் வைத்திருக்கிறது. அந்த சட்டத்தை யாராவது கேள்வி கேட்டால், அதற்கு சட்ட வலு கொடுப்பதற்கு ஏதுவாக உச்ச நீதிமன்றத்தையும் அது ‘மறைமுகமாக’ தன் பக்கம் வைத்திருக்கிறது.


4. இந்திய ஒன்றிய அரசு தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ‘அரசின் வன்முறை மீதான ஏகபோக உரிமை (State monopoly on violence)’


ஒருவேளை மேலே கூறியுள்ள மூன்றையும் நீங்கள் எதிர்த்து குரல் எழுப்பினால் இருக்கவே இருக்கிறது இந்திய ஒன்றியத்தின் monopoly on violence.


ஒரு இறையாண்மையுள்ள அரசு என்பதற்கான வரையறையில் ‘அரசின் வன்முறை மீதான ஏகபோக உரிமை (State monopoly on violence)’ என்பது மிக முக்கியமான பண்பு.


அந்த பண்பு இல்லாவிடில் அது ஒரு அரசே அல்ல.


‘The power of the state was defined by its monopoly of the legitimate use of force. Without the legitimate ability to deploy violence, modern states cannot function’


‘அரசின் வன்முறை மீதான ஏகபோக உரிமை’ என்பது ஒரு இறையாண்மை நிலப்பரப்பில் அரசுக்கு மட்டுமே வன்முறையை கையில் எடுப்பதற்கான முழு உரிமையும் உண்டு என்று பொருள்.


அதன்படி நீங்கள் நான் மேலே கூறிய முதல் மூன்றையும் கேள்விக்கு உட்படுத்தினால், இந்திய ஒன்றியம் கடைசியாக அதனது State monopoly on violence என்ற அஸ்திரத்தை பாவிக்கும்.


• ஆக ஆரிய மேலாதிக்கம் இந்திய ஒன்றிய அரசின் இந்த கட்டமைப்பிற்குள் அதனது உயிர்நாடியை பாதுகாப்பாக வைத்திருக்கிறது.


அந்த ஆரிய மேலாதிக்கத்தினை எதிர்க்கும் எவரும்  இந்திய ஒன்றிய அரசின் இந்த கட்டமைப்பின் ஏதாவது ஒரு பகுதிக்குள் அகப்பட்டுகொள்வார்கள்.


அதனால்தான் மேலே குறிப்பிட்டேன் இது மனிதர்கள் சார்ந்தது அல்ல.இது ஆரியம் நன்கு திட்டமிட்டு வடிவமைத்து வைத்திருக்கும் ஒரு பொறிமுறை.


• இது கட்சி சார்ந்ததும் அல்ல. 


உதாரணமாக அடுத்த பாராளுமன்ற தேர்தலில்  பாஜக தோல்வி அடைந்து காங்கிரஸ் அதிகாரத்திற்கு வந்தால் ஆரிய மேலாதிக்கம் முடிவடைந்தது என பொருளா? இல்லை.


அப்பொழுதும் ஆரியம் வடிவமைத்திருக்கும் இந்த இந்திய ஒன்றிய அரசின் இந்த கட்டமைப்பு வழமைபோலவே இயங்கும். 


இது கட்சிகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது.


• ஆனால் தமிழ்நாட்டில் நடப்பது என்ன?


மூச்சுக்கு முன்னூறு தடவை ஆரிய மேலாதிக்கத்தை எதிர்ப்பதாக தம்பட்டம் அடிக்கிறது.


மதுவந்தி, துக்ளக் குருமூர்த்தி ,இத்யாதி எனும் காமடி பீஸ்களை எதிர்ப்பதுதான் ஆரியத்தை எதிர்ப்பதாக பொருள் என அது நம்பி கொண்டிருக்கிறது.


அல்லது வெறும் மேடை அலங்கார வார்த்தைகளை அள்ளி வீசி கொண்டிருக்கிறது.


இவர்களாகவே ஆரியத்தை எதிர்த்த அறிஞர் அண்ணா, முத்தமிழ் வித்தகர்,தளபதி, பெரியார் மண் என தங்களுக்கு தாங்களே பட்டங்களை சூட்டிகொள்ள வேண்டியதுதான்.


உண்மையிலேயே ஆரியம் தமிழ்நாட்டின் இந்த அறியாமையை நினைத்து மனதிற்குள் சிரித்து கொள்ளும்.


காரணம் ஆரியத்தின் இந்த உயிர்நாடியை தொடாதவரை ஆரிய மேலாதிக்கத்திற்கு எந்த அச்சுறுத்தலும் நேரப்போவதில்லை. 


இன்னும் நூறு வருடங்களுக்குள் அது வெற்றிகரமாக அதனது assimilation செயற்திட்டத்தை நிறைவேற்றி முடித்திருக்கும்.


இன்னும் வெளிப்படையாக சொல்லப்போனால் தமிழ்நாடு ஆரியத்தின் உயிர்நாடியை வீழ்த்தும் என நான் நினைக்கவில்லை.


ஏனெனில் கடந்த 50 வருட காலமாக தமிழ்நாட்டை ஆண்ட திராவிட தலைவர்கள் ஆரியத்தின் உயிர்நாடி எதுவென காட்டாமல் வெறுமனே மனிதர்களை காட்டியே தமிழ்நாட்டு மக்களை பழக்கப்படுத்தி் வைத்திருக்கிறார்கள்.


க.ஜெயகாந்த்