உரிமையாளர் :- முகநூல் ஜெயகாந்த்.க
பொதுவாக என்னுடைய பதிவுகளில், நான் உலக ஒழுங்கின் நகர்வுகளை போரியல்ரீதியான பார்வையில் அணுகுவதை நீங்கள் அவதானித்திருக்கலாம்.
• இதன் பொருள் என்ன?
மனித உயிர்கள் பந்தாடப்படும் போரை நான் விரும்புகிறேன் என்று பொருளா?
நிச்சயம் இல்லை.
மனித செயற்பாடுகளிலேயே மிகவும் கொடியது போர் என்பதை மனப்பூர்வமாக அறிவேன். அன்றாட வாழ்வில் நாம் வெறுக்கும் சகல கொடியவைகளும் ஒருங்கே நிகழ்வதற்கான கள வாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பவை போர் என்பதில் சந்தேகமில்லை.
• பிறகு ஏன் போரியல் பார்வையிலேயே அணுகுகிறேன்?
war is a necessary evil என்பதுதான் குரூரமான யதார்த்தம்.
இதை இன்னும் மிதமாக சொல்வதாக இருந்தால்
War may sometimes be a necessary evil என சொல்லாம்.
போர் எனும் கொடிய மிருகம் சிலவேளைகளில் தவிர்க்க முடியாததாகிறது என்பதுதான் கள யதார்த்தம்.
காரணம் மனித மனங்கள் சிக்கலானவை. மனிதன் எப்படியாவது தான் வெல்லவேண்டும் என்ற உந்துதலில் கடைசியில் தனது பலத்தை கொண்டு வன்முறையை உபயோகிப்பான். இது அவனது ஆதார உணர்ச்சி.
அதனால் மனிதர்களை கொண்ட உலகில் வன்முறை என்பது தொடர்ந்து கொண்டேயிருக்கும். ஆனால் காலத்திற்கு ஏற்ப வேறு வேறு வடிவங்களில்.
• இன்றைய உலகில் அது எத்தகைய வடிவத்தை கொண்டிருக்கிறது?
இன்றைய உலகு இறையாண்மை அரசுகளால் ஆளப்படுவது. இன்றைய உலக நிலப்பரப்பு சுருக்கமாக சொன்னால் சுமார் 190 இறையாண்மை அரசுகளால் ஆளப்படுவது.
இந்த இறையாண்மை அரசுகள் அதனது ஆளுகைக்கு உட்பட்ட நிலத்தில் தனது குடிமக்கள் வன்முறையின்றி வாழ்வதை நீதி,சட்டம்,ஒழுங்கு என்பவற்றை வைத்து உறுதிபடுத்தி கொள்கின்றன.
ஆனால் மற்றைய இறையாண்மை அரசுகளிடம் இருந்து தன்னை தற்காத்து கொள்ள வன்முறையை நாடியே ஆகவேண்டும். அதாவது தன்னை தற்காத்து கொள்ள தனக்கான இராணுவ வலிமையை தக்கவைத்து கொள்ளவேண்டும்.
காரணம் உலக ஒழுங்கு ஒரு ANARCHIC SYSTEM. இதைப்பற்றி முன்னைய பதிவுகளில் விளக்கியிருக்கிறேன்.
• போரியல்ரீதியில் பலமான நிலையை தக்கவைத்து கொள்ளுதல்
ஆக ஒரு இறையாண்மை அரசு தன்னை தற்காத்து கொள்ள இராணுவ வலிமையை தக்கவைத்து கொள்ளவேண்டும் என்பதுதான் கள யதார்த்தம் எனும்போது, அதனது சகல நகர்வுகளுமே தனது இராணுவ வலிமையை போரியல்ரீதியில் பலமான நிலையில் வைத்திருக்கவேண்டும் என்பதை உறுதிபடுத்துவதை சார்ந்ததாகவே இருக்கும்.
இந்த போரியல்ரீதியில் பலமான நிலையை தக்கவைத்து கொள்ளுதல் என்பதை மிக எளிமையாக Militarily Advantageous Position என புரிந்து கொள்ளலாம். ஆனால் இது முழுமையான விளக்கம் அல்ல. அமெரிக்கா போன்ற super power போரியல்ரீதியில் பலமான நிலை என்பதை military superiority என்பதாகவே தக்கவைத்து கொள்ள விரும்புகிறது.
ஒரு இறையாண்மை அரசின் தேசிய நலனில் (National Interest) இந்த போரியல்ரீதியில் பலமான நிலையை தக்கவைத்து கொள்ளுதல் என்பது மிக முக்கியமான இலக்கு.அதில் ஒரு இறையாண்மை அரசு சமரசம் செய்து கொள்ளாது.
• போரியல்ரீதியான பார்வையின்றி அல்லது அறிவின்றி உலக ஒழுங்கின் நகர்வுகளை அணுகினால் எப்படியிருக்கும்?
உங்களால் உலக ஒழுங்கு ஆடும் சதுரங்க ஆட்டத்தை புரிந்துகொள்ள முடியாது.
குருடர்கள் யானையின் ஒவ்வொரு பாகத்தை தொட்டு உணர்ந்து புரிந்து கொண்டது போல இருக்கும்.
நீங்களாகவே அறம், ஏகாதிபத்தியம், முதலாளித்துவம், வெள்ளை நிற வெறியர்கள், துரோகம்,வஞ்சகம் என குண்டு சட்டியிற்குள்ளேயே இந்த சதுரங்க ஆட்டத்தை புரிந்து கொள்ள முயற்சிப்பீர்கள்.
• நீங்கள் இந்த புவிசார் நலன் அரசியல்,போரியல் என்பவற்றின் புரிதல் இல்லாமல் இந்த சதுரங்க ஆட்டத்தை ஆடினால் என்ன நடக்கும்?
பரிதாபமாக தமிழ் இனம் தோல்வியடையும்.
• உதாரணத்திற்கு ஏன் சீனா ஆசிய பசுபிக் பிராந்தியத்திலிருந்து அமெரிக்காவை அப்புறப்படுத்த முயல்கிறது?
உங்களின் அகராதியில் சீனா ஆக்கிரமிப்பாளராக மாறி அண்டை நாடுகளை அச்சுறுத்துகிறது என
பொருள் தருவீர்கள். இது சரியான காரணமா?

அமெரிக்கா ஏன் Western Hemisphere இல் இன்னொரு நாடு இராணுவ வலிமையோடு வளர்வதை அனுமதிப்பதில்லை?
ஏன் ஈரான் அணு ஆயுத வல்லமை பெறுவதை இஸ்ரேல் எப்பாடுபட்டாவது தடுக்க முயல்கிறது?
சரி. ஈரான் ஏன் அணு ஆயுத வல்லமையை பெற முயல்கிறது? அணு ஆயுத வல்லமையை பெற்ற பிறகு இஸ்ரேலுடன் போர் புரியவா? நிச்சயம் இல்லை. பிறகு ஏன்?
இரு நாடுகள் அணு ஆயுத வல்லமை பெற்றால் போரியல் சமன்பாடுகள் மாறும். அங்கு Mutual Assured Destruction(MAD), Second Strike Capability போன்ற அணு ஆயுத சமன்பாடுகள் முக்கிய காரணிகளாக மாறும். இவைகளை புரிந்து கொள்ளாமல் எப்படி ஈரான்,இஸ்ரேல் நகர்வுகளை புரிந்து கொள்வது?
• இந்த போரியல்ரீதியான நகர்வுகள் உலக ஒழுங்கின் எல்லாவற்றிலும் அதனது தாக்கத்தை செலுத்துகின்றன:
விடுதலை புலிகளின் இறுதிப்போரில் இந்தியாவின் தாக்கம் ஏன் பெரியதாக இருந்தது?
ஏன் அமெரிக்கா இந்தியாவின் விருப்பப்படி இறுதிப்போர் முடிவடைய அனுமதித்தது?
நேட்டோ உறுப்பினரான துருக்கி S-400 (SAM) ஐ ரஷ்யாவிடமிருந்து வாங்கியபோது, அமெரிக்கா துருக்கி மீது Countering America’s Adversaries Through Sanctions Act (CAATSA) தடை விதித்தது.
ஆனால் இந்தியாவும் அண்மையில் S-400 ஐ ரஷ்யாவிடம் கொள்வனவு செய்தது. ஆனால் இந்தியா மீது இத்தகைய தடைகளை அமெரிக்கா விதிக்காது.
இதை புரிந்து கொள்ள அடுத்த நூறு வருடங்களுக்கு ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் இறுக்கமடையப்போகும் சீன-அமெரிக்க Great Game பற்றிய புரிதல் இருக்கவேண்டும்.
இந்த சீன-அமெரிக்க Great Game பற்றிய புரிதல் உங்களுக்கு இருந்தால், இந்தியாவின் விருப்பப்படி அமெரிக்கா ஏன் விடுதலை புலிகளின் போராட்டத்தை அழிக்க உதவியது என்பதற்கான விடை கிடைக்கும்.
• தமிழ் இனத்தின் அப்பாவித்தனமான உளவியல்
தமிழர்கள் நாங்கள் உயிர்மை நேயவாதிகள். நாங்கள் எத்தகைய நகர்வையும் அறத்தின் அடிப்படையிலேயே மதிப்பீடு செய்வோம் என்பது பாராட்டுக்குரியதுதான்.
ஆனால் தமிழ் இனத்தின் இத்தகைய உயர் விழுமியங்கள் உலக ஒழுங்கின் சதுரங்க ஆட்டத்தின் போக்கில் கால் தூசியளவு கூட பாதிப்பை ஏற்படுத்தாது.
போரியல்ரீதியில் பலமான நிலையை தக்கவைத்து கொள்ளுதல் என்பதை பிரதான இலக்காக வைத்து
நகர்வுகளை மேற்கொள்வது என்பது பல நூற்றாண்டுகளாக அரசுகள் ஆடி வரும் சதுரங்க ஆட்டம்.
இந்த சதுரங்க ஆட்டத்தின் அடிப்படை மாறாது. காரணம் மீண்டும் மேலே கூறியதுதான். வன்முறை என்பது மனிதனின் ஆதார உணர்ச்சி. இந்த உலகம் என்பது ANARCHIC SYSTEM.
இதில் இன்னொரு மேலதிக விடயமும் உண்டு. தமிழ் இனம் இறையாண்மை அரசு அற்ற ஒரு இனம். அதற்கு குரல் இல்லை. அது எந்தெந்த நாடுகளில் வாழ்கிறதோ அந்தந்த நாடுகள்தான் அதன் முதலாளி. இதுதான் கசப்பான கள யதார்த்தம்.
• விடுதலை புலிகளின் போரியல் நகர்வுகளை புரிந்துகொள்ள திணறும் தமிழ் இனம்
விடுதலை புலிகளின் பல நகர்வுகளை புரிந்து கொள்ளமுடியாமல் தமிழ் இனம் முக்கி திணறியதற்கான காரணமும் தமிழ் இனத்தின் போரியல்ரீதியான அறிவு குறைபாடே.
அதனாலேயே உலக ஒழுங்கு ராஜதந்திரத்துடன் விளையாடிய சில சொல்லாடல்களை எதிர்கொள்ள
தமிழ் இனம் திணறியது.
விடுதலை புலிகள் தன்னந்தனியாக இறையாண்மை அரசுகளுடன் 26 வருடங்கள் போரிட்டார்கள்.
இறையாண்மை அரசுகள் நான் மேலே கூறிய சதுரங்க ஆட்டத்தை எந்த முறையில் ஆடினார்களோ அதே முறையில்தான் விடுதலை புலிகளும் ஆடவேண்டும். இல்லாவிடில் இந்த ஆட்டத்தில் தோற்றுவிடுவீர்கள். அவ்வளவுதான்.
• இன்னொரு காரணமும் உண்டு
விடுதலை புலிகளின் ஆயுத போராட்டத்தை போரியல் பார்வையில் அணுகி அதை அடுத்த தலைமுறைக்கு கடத்தவேண்டும் என்பதும் என்னுடைய முக்கியமான நோக்கம்.
போரியல் பார்வையில் விடுதலை புலிகளின் போராட்டத்தை அணுகாவிடில், விடுதலை புலிகளின் போராட்டத்தை உலக ஒழுங்கு மிக எளிதாக பயங்கரவாதமாக கட்டமைத்துவிடும்.
அதற்கேற்றாற்போல நமது தமிழ் இனத்திலேயே சில கூமுட்டைகள் ‘ராஜீவ் காந்தியை அரசியல் கொலை செய்ததாலேயே இந்தியா தமிழீழத்தை அனுமதிக்கவில்லை’ என்பது போன்ற கம்பி கட்டும் கதையெல்லாம் விடுவார்கள்.
ராஜீவ் காந்தி அரசியல் கொலை நடந்திருக்காவிட்டாலும் இந்தியா தமிழீழத்தை ஆதரிக்காது. ஏன் என்பதை தமிழ்நாட்டு தமிழ் மக்கள் சிந்தித்திருந்தால் பல சூட்சுமங்கள் புரிந்திருக்கும். அதை தனி பதிவாக எழுதுகிறேன்.
• தமிழ் இனம் கற்று கொள்ளவேண்டியது
உலக ஒழுங்கின் நகர்வுகளை போரியல்ரீதியான பார்வையிலும் அணுக பயிலுங்கள்.இந்த சதுரங்க ஆட்டம் உங்களுக்கு புரிய தொடங்கும்.
இதை எளிமையாக விளக்க அடுத்து சில பதிவுகளை பதிவிடுகிறேன்.
க.ஜெயகாந்த்
0 கருத்துகள்