தமிழ்நாட்டில் இயங்கிவரும் கடைகள்,நிறுவனங்கள் மற்றும் கல்வி நிலையங்கள் என அனைத்து சேவை/விற்பனை கூடங்களின் விளம்பர மற்றும் முகப்பில் தமிழ் கட்டாயம் இடம்பெற்றிருக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் இயங்கிவரும் கடைகள் பல பெயர்பலகை விதிகளை பின்பற்றாது உள்ளன. மேலும் தற்போதைய பெயர்பலகை விதி வணிக நிறுவனங்களை மட்டும் கட்டுப்படுத்துவதாக உள்ளது. மேலும் விதியில் இரண்டாவதாக இங்கிலாந்தின் தேசியமொழியான இங்கிலீசு கட்டாயமாக்கப்படுகிறது. எனவே தற்போதைய சட்டத்தை முற்றாக கைவிட வேண்டும், புதிய சட்டம் ஒன்றை ஏற்ற வேண்டும்.
தமிழ்நாட்டில் செயல்படும் வணிக நிறுவனங்கள் முதலில் தமிழும் அதன் பிறகு பிறமொழியும் என 2:1 விகிதத்தில் பெயர்பலகை வைக்க வேண்டும். இங்கிலிசு கட்டாயமாக்கப்பட கூடாது, மேலும் தனியார் "பயிற்சி மையங்களை" வணிக நிறுவனமாக கருதி அவற்றிற்கும் இந்த விதியை நீட்டிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் செயல்படும் பொறியியல் மற்றும் தொழிற்கல்வி நிலையங்கள் இங்கிலிசு பெயர் பலகைகளையே பயன்படுத்தி வருகின்றன. இதை முறைப்படுத்தி அனைத்துவகை கல்லூரிகளும் முதலில் தமிழ் இரண்டாவது பிறமொழி என பெயர் பலகை வைக்க கட்டாயப்படுத்தப்பட வேண்டும்.
இதனை உறுதிபடுத்த தமிழ்நாடு அரசு தற்போதைய கூட்டத்தொடரிலேயே சட்டமியற்ற வேண்டும். மேலும் தமிழ் அல்லாத பிறமொழி சொற்களை தமிழிலிருந்து நீக்க குழு ஒன்றை அமைக்க வேண்டும். இலத்தீன் எழுத்துக்கள் தமிழை எழுத தகுதியற்றவை எனவும் அறிவிக்க வேண்டும் தமிழ் எழுத்துக்களில் மட்டுமே தமிழ் எழுதப்படுகிறது என்பதை தமிழ்நாடு அரசு உறுதிபடுத்த வேண்டும்.
இந் நல் விடயங்களை பாண்டித்துரைத் தேவர் அவர்கள் நான்காம் தமிழ்ச்சங்கம்(தமிழ்கழகம்) கண்ட இந்நாளிலேயே துவங்க வேண்டுமென தமிழ்நாடு அரசை தமிழ்த் தேய அவையம் கேட்டுக்கொள்கிறது.
~ தமிழ்த் தேய அவையம்
0 கருத்துகள்