முகநூல் பதிவு - க.ஜெயகாந்த்
போரியல் பார்வையில் வரலாற்று நிகழ்வுகள் - பகுதி 1
(இந்திய இராணுவத்தின் Operation பூமாலையும் இந்திய இலங்கை ஒப்பந்தமும்)
இலங்கையிலேயே பிறந்து வளர்ந்த ,நன்கு படித்த தமிழர்களே ‘என்னதான் இருந்தாலும் 1987 இல் இந்தியா, தமிழ் மக்கள் மீது இரக்கம் கொண்டு உணவு பொதிகளை விமானம் மூலம் போட்டது தானே ‘ என நெகிழ்ச்சியுடன் பலதடவை என்னிடம் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
வரலாற்று சம்பவங்களை, அதில் உள்ள அரசுகளின் ராஜதந்திர நகர்வுகளை , போரியல் நகர்வுகளை எவ்வளவு கேணைத்தனமாக தமிழர்கள் அணுகுகிறார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம் .
இதே போன்ற பார்வையோடு அணுகும் பல வரலாற்று நிகழ்வுகள் உண்டு . அவற்றில் மறைந்திருக்கும் போரியல் நகர்வுகளை, ராஜதந்திர நகர்வுகளை தனித்தனி பதிவுகளாக தந்து உங்களுக்கு நான் அடையாளம் காட்டுகிறேன் .
மேலே சொன்ன இந்திய விமானப்படை உணவு பொதிகளை போட்ட வரலாற்று நிகழ்வில் இந்திய , இலங்கை அரசுகளின் ராஜதந்திர, போரியல் நகர்வுகள் எப்படி இருந்தன என கீழே எளிமையாக விளக்கியிருக்கிறேன்.
• #இந்த வரலாற்று நிகழ்வின் பின்னணி
1987 ஆம் ஆண்டு மே மாதம் இலங்கை அரசு தனது முப்படைகளையும் ஒருங்கிணைத்து ,யாழ் குடாவை புலிகளின் கட்டுபாட்டிலிருந்து கைப்பற்றும் நோக்கோடு Operation Liberation எனும் பெரும் இராணுவ நடவடிக்கையை தொடங்கியது.
இலங்கையில் நடந்த இராணுவத்தின் முதலாவது பெரும் மரபுவழி இராணுவ நடவடிக்கை இதுதான்.
இந்த நடவடிக்கையின் முதல் கட்டத்தின்படி, கைப்பற்ற வேண்டிய இடங்களை இலங்கை இராணுவம் கைப்பற்றியது . விடுதலை புலிகள் யாழ்குடா நாட்டின் பல பகுதிகளிலிருந்து பின்வாங்கினார்கள்.
இனி இந்தியாவின் ராஜதந்திர நகர்வை பார்ப்போம். அதற்கு முன் வரலாற்றை பின்னோக்கி பார்த்துவிட்டு வருவோம்.
• #80களில் இந்திய-இலங்கை உறவு
அமெரிக்க- சோவியத்திற்கு இடையிலான Cold War காலகட்டங்களில், இந்தியாவின் sphere of influence பிராந்தியத்தில் அமெரிக்க சார்பு நாடாக இலங்கை இருப்பதை இந்தியா தனக்கு அச்சுறுத்தலாக கருதியது.
தனது செல்வாக்கிற்கு உட்பட்ட நாடாக இலங்கையை கொண்டுவர சரியான தருணத்தை எதிர்பார்த்தபடி இருந்தது. அந்த காலகட்டத்தில் தொடங்கியதுதான் தமிழர்களின் ஆயுதப்போராட்டம்.
இந்த காலகட்டத்தில்தான் Voice Of America எனும் வானொலி சேவையினை அமைக்க அமெரிக்காவிற்கு இலங்கை ஒப்புதல் தந்தது.
பெயரளவில் வானொலி சேவை என அறியப்பட்டாலும் , அமைக்கப்படும் கருவிகளின் மூலம் இந்து சமுத்திரத்தில் உள்ள இந்திய கடற்படையின் நடமாட்டங்களை கண்காணிக்க முடியும் என்ற அச்சம் இந்தியாவிற்கு இருந்தது
இலங்கையின் இத்தகைய அணுகுமுறைகள், அதற்கு எதிரான நகர்வுகளை செய்தாகவேண்டிய நிலைக்கு இந்தியாவை தள்ளியது.
• #இந்தியா எடுத்த முடிவு
இலங்கையை தனது செல்வாக்கிற்கு உட்பட்ட நாடாக கொண்டுவர முடிவெடுத்து நகர்த்தப்பட்ட நகர்வுதான் தமிழ் போராளி இயக்கங்களுக்கு ஆயுத பயிற்சியும் , ஆயுதங்களும் கொடுப்பது என்ற முடிவு.
இலங்கையின் ஆயுதப்போராட்டம் என்பது இலங்கையுடன் பேரம் பேசுவதற்கான இந்தியாவின் bargaining chip.
ஆனால் சில விடயங்களை இந்தியா உறுதியாக பின்பற்றியது .
• தமிழீழம் என்ற இறையாண்மை அரசு உருவாக அனுமதிப்பதில்லை.
• தனது கட்டுப்பாட்டை மீறி இயக்கங்கள் வளரக்கூடாது.
• கெரில்லா இயக்கங்களாக இருக்கவேண்டுமே ஒழிய மரபு இராணுவ ஆற்றலை இயக்கங்கள் பெற்றுவிடக்கூடாது. அதற்காக இலகு ரக ஆயுதங்களே (small arms light weapon) இயக்கங்களுக்கு வழங்கப்பட்டது.
ஏன் கெரில்லா போர்முறையிலிருந்து மரபு போர் படையணியாக மாறவேண்டும் என்பதன் போரியல் தேவையை விளக்கி தனி பதிவொன்றை முன்னர் எழுதியிருந்தேன். அதை பிறகு மீள பதிவிடுகிறேன்.
• இயக்கங்களுக்குள் ஒற்றுமை ஏற்படக்கூடாது. காரணம் ஒரு இயக்கம் இந்தியாவின் பேச்சை கேட்காவிட்டாலும் மற்றைய இயக்கங்களை வைத்து அதை தீர்த்துவிடலாம் அல்லது தனது தீர்வை பெரும்பான்மை இயக்கங்கள் ஆதரிப்பதாக சொல்லி தீர்வை திணித்துவிடலாம்.
#மேலே விவரிக்கப்பட்டவை போரியல்ரீதியான அணுகுமுறைகள். நான் எப்பொழுதும் சொல்வது போல நாடுகள் தனது நலனுக்கேற்றவாறுதான் காய்களை நகர்த்தும். இங்கு சரி, தவறு என்ற சொற்களுக்கு பொருள் இல்லை. நமக்கு தேவையா அல்லது தேவையில்லையா என்பதுதான் இங்கு முக்கியம்.
தமிழ் இனம்தான் இந்த பக்கத்தை பார்க்காமல் சராசரி மனிதனின் உணர்ச்சிகளினூடாக இந்த நகர்வுகளை மதிப்பிடுகிறது.
தலைவர் பிரபாகரன் இந்த புவிசார் அரசியல்/போரியல்/ராஜதந்திர சதுரங்க ஆட்டத்தை உலக ஒழுங்குடன் 26 வருடங்கள் ஆடினார்.
தமிழ்இனமும் இந்த சதுரங்க ஆட்டத்தை தமது நலன் சார்ந்து ஆட கற்றுக்கொள்ள வேண்டும். அவ்வளவுதான்.
• சரி இனி மறுபடியும் 1987 Operation Liberation இற்கே வருகிறேன்.
இலங்கையின் இராணுவம் இந்த இராணுவ நடவடிக்கையை தொடங்கியபோது களத்தில் விடுதலை புலிகள் மட்டுமே இருந்தார்கள். ஏனெனில் 1986 இல் விடுதலை புலிகள் மற்றைய இயக்கங்களை முற்றாக அப்புறப்படுத்தியிருந்தார்கள்.
விடுதலை புலிகளுக்கு எதிரான இலங்கையின் இந்த Operation Liberation இராணுவ நடவடிக்கை வெற்றி பெற்றால் களத்தில் ஆயுத போராட்டம் என்பது இல்லாமல் போய்விடும். அப்படி ஒரு நிலை நேர்ந்தால் இலங்கையுடன் பேரம் பேசும் தமது ஆற்றலை இழந்துவிடுவோம் என இந்தியா நினைத்தது.
• விடுதலை புலிகளை குறைத்து மதிப்பீடு செய்த இந்தியா
இலங்கையின் இந்த இராணுவ நடவடிக்கை வெற்றிபெற்று யாழ்குடாவை புலிகள் இழந்திருந்தால் விடுதலை புலிகள் இயக்கம் முற்றாக அழிந்திருக்குமா?
நிச்சயம் அவர்கள் முற்றாக அழிந்திருக்க போவதில்லை.
சில தரவுகளை தருகிறேன்.
இலங்கை இராணுவத்தின் இந்த Operation Liberation நடந்தது 1987 மே மாதம்.
ஐந்து மாதங்கள் கழித்து விடுதலை புலிகளுக்கும் இந்திய படைக்கும் போர் மூண்டது.
1987 அக்டோபர் மாதம் இந்திய படை ‘Operation Pawan’ மூலம் அதே யாழ்குடாவை கைப்பற்றியது. விடுதலை புலிகள் வன்னி காடுகளுக்கு பின்வாங்கினர்.
அதன் பின்னர் இந்தியா பின்வரும் இராணுவ நகர்வுகளை விடுதலை புலிகளுக்கு எதிராக நடத்தியது.
• Operation VAJRA (February-March 1988)
• Operation VIRAT TRISHUL (March 1988)
• Operation CHECKMAT (May-August 1988)
• Operation TOOFAN (June 1989)
• Operation TULIP BLOOM
• Operation SWORD EDGE
• விடுதலை புலிகள் அழிந்து போனார்களா?
இல்லை. 2000 இற்கும் குறைவான போராளிகளை மட்டுமே வைத்து கொண்டு கிட்டத்தட்ட 150000 இந்திய படைகளுடன் கெரில்லா பாணி போரை நடத்தி கொண்டு ராஜதந்திரத்துடன் சில காய் நகர்த்தல்களை செய்து வெற்றிகரமாக இந்திய படைகளை வாபஸ் பெறவைத்தார்கள்.
அதுபோல 1995 இல் இலங்கை இராணுவம் ‘Operation Riviresa’ மூலம் யாழ்ப்பாணத்தை கைப்பற்றியது. விடுதலை புலிகள் வன்னி பெருநிலப்பரப்புக்கு தமது இராணுவ தளங்களை நகர்த்தினார்கள். பின்னாளில் வன்னி பெரு நிலப்பரப்பு அவர்களின் de facto state ஆக மாறியது.
யாழ்ப்பாணத்தை இழந்த பின்னர் விடுதலை புலிகள் நடத்திய அழித்தொழிப்பு சமர்கள்தான் ஓயாத அலைகள்-1, ஓயாத அலைகள்-2, ஓயாத அலைகள்-3, ஜெயசிக்குறு எதிர்சமர், தீச்சுவாலை எதிர்சமர் , இத்யாதி, இத்யாதி என்பவையெல்லாம்.
• இது தெளிவாக ஒரு போரியல் உண்மையை உணர்த்துகிறது.
யாழ்ப்பாணம் எனும் ஒரு நிலப்பரப்பை இழப்பதுவோ அல்லது வேறு ஒரு நிலப்பரப்பை இழப்பதுவோ விடுதலைப்புலிகளை முற்றாக அழிக்கவில்லை என்ற போரியல் உண்மையை காட்டுகிறது.
உண்மையில் போரில் வெற்றி என்பதை போரியல் அறிஞர்கள் பின்வருமாறு வரையறுக்கிறார்கள்.
“Destroying the enemy's military assets and his/her will to fight is the defining aim of all wars”
எதிரின் இராணுவ வளங்களை முற்றாக அழித்தல் அத்துடன் எதிரியின் போரிடுவதற்கான மன துணிவை முற்றாக அழித்தலே போரில் வெற்றி என்பதன் உண்மையான பொருள்.
அதன்படி யாழ்ப்பாண நிலப்பரப்பை இழந்தபோதும் விடுதலை புலிகள் தங்களது போரிடுவதற்கான மன துணிவையும், இராணுவ வளங்களையும் இழக்கவில்லை என்பதை வரலாறு தெளிவாக காட்டுகிறது.
மேலே கூறியது போல இது இந்தியாவின் புலிகள் மீதான பிழையான குறைமதிப்பீடு . இதே குறைமதிப்பீட்டில்தான் ஒரு வாரத்தில் புலிகளை அழித்துவிடமுடியும் என இந்திய படையின் தலைமை பின்னாளில் முடிவெடுத்தது எல்லாம்.அதன்பின்பு இரண்டு வருடங்களாக புலிகளுடன் போரிட்டு ஆயிரக்கணக்கான படையினரை இழந்தது.
• #இந்திய விமான படையின் ஓபரேசன் பூமாலை
தனது பேரம் பேசும் நிலையை இழக்காதிருக்க இந்தியாவிற்கு இந்த இராணுவ நடவடிக்கையை நிறுத்தியாக வேண்டிய நிர்ப்பந்தம்.
முதலில் மனிதாபிமான உதவி என்ற பெயரில் படகுகள் மூலமாக உணவை அனுப்ப முயற்சித்தது. அந்த படகுகளை இலங்கை கடற்படை தனது கடல் எல்லைக்குள் நுழைய அனுமதிக்கவில்லை.
இதன்பின்னர்தான் இந்தியா தனது மிராஜ் போர்விமானங்கள் புடைசூழ அன்டனோவ் விமானங்களிலிருந்து உணவுப்பொருட்களை போட்டது.
இந்த உணவுபோடும் Mission இற்கு இந்திய விமானப்படை வைத்த பெயர் ‘ஓபரேசன் பூமாலை’ .
இந்த ஓபரேசனிற்கு சில மணித்தியாலத்திற்கு முன்னர் இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் அழைக்கப்பட்டு இந்த Mission இற்கு இலங்கை விமானப்படை இடையறு செய்தால் தக்க இராணுவ பதிலடி கொடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டிருந்தார்.
இலங்கையின் வான்பரப்பில் இந்தியாவின் விமானப்படை செயல்பட்ட முறை , போரியல் வழக்கில் Show Of Force என அழைக்கப்படும். பலமான இராணுவம் தனது எதிர் தரப்புக்கு தனது வல்லமையை காட்டி எச்சரிக்கை செய்வதுதான் இதன் அர்த்தம்.
• #இந்தியாவின் நோக்கம் நிறைவேறியது
இந்த நிகழ்வுக்கு பின் இந்தியா தனது இராணுவத்தை அனுப்பி ஆக்கிரமிப்பு செய்யக்கூடும் என இலங்கை பயந்தது.
அதை தடுக்கும் விதமாக இந்தியாவுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பித்தது. எதற்காக இந்தியா ஆயுதப்போராட்டத்தை ஆதரித்ததோ அதற்கான வாய்ப்பு கனிந்தது.
அதன் தொடர்ச்சியாக இந்திய அழுத்தத்தின் பேரில் இந்திய - இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது .
அப்படியானால் அந்த ஒப்பந்தத்தில் இந்திய நலன் சார்ந்த சரத்துகள் இருக்கவேண்டுமே. இருக்கிறது . அவைகளில் சில சுருக்கமாக.
இந்த பகுதி கீழே படமாக தரப்பட்டுள்ளது.
Annexure to the Indo Lanka Accord
1. Conscious of the friendship between our two countries stretching over two millennia and more, and recognizing the importance of nurturing this traditional friendship, it is imperative that both Sri Lanka and India reaffirm the decision not to allow our respective territories to be used for activities prejudicial to each other's unity, territorial integrity and security.
2. In this spirit, you had, in the course of our discussions agreed to meet some of India's concerns as follows:
(i) Your Excellency and myself will reach an early understanding about the relevance and employment of foreign military and intelligence personnel with a view to ensuring that such presences will not prejudice Indo - Sri Lankan relations.
(ii) Trincomalee or any other ports in Sri Lanka will not be made available for military use by any country in a manner prejudicial to India's interests.
(iii) The work of restoring and operating the Trincomalee Oil Tank Farm will be undertaken as a joint venture between India and Sri Lanka.
(iv) Sri Lanka's agreements with foreign broadcasting organisations (read Voice of America) will be reviewed to ensure that any facilities set up by them in Sri Lanka are used solely as public broadcasting facilities and not for any military or intelligence purposes.
3. In the same spirit India will:
(i) Deport all Sri Lankan citizens who are found engaging in terrorist activities or advocating separatism or secessionism.
(ii) Provide training facilities and military supplies for Sri Lankan forces.
4. India and Sri Lanka have agreed to set up a joint consultative mechanism to continuously review matters of common concern in the light of the objectives stated in para 1 and specifically to monitor the implementation of other matters contained in this letter.
• #மேலேயுள்ள சரத்துகளில் மிக முக்கியமானவையை சுருக்கமாக பார்ப்போம்.
(ii) Trincomalee or any other ports in Sri Lanka will not be made available for military use by any country in a manner prejudicial to India's interests.
இந்தியாவின் ஒப்புதல் இன்றி இலங்கை அந்நிய நாட்டின் இராணுவ உதவிகளை கோரமுடியாது. இந்திய நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் எந்த செயற்பாடுகளையும் இலங்கை மேற்கொள்ளமுடியாது . குறிப்பாக இலங்கையின் எந்த துறைமுகங்களும் அந்நிய நாடுகளின் இராணுவ செயற்பாடுகளுக்கு பயன்படுத்த முடியாது .
(iv) Sri Lanka's agreements with foreign broadcasting organisations will be reviewed to ensure that any facilities set up by them in Sri Lanka are used solely as public broadcasting facilities and not for any military or intelligence purposes.
அமெரிக்காவிற்கு அனுமதி அளிக்கப்பட்ட Voice Of America என்ற வானொலி சேவை இராணுவ தேவைகளுக்கு பயன்படுத்தப்படமாட்டாது என்பதை இலங்கை உறுதிசெய்யவேண்டும்.
#அதற்கு பதிலாக இந்தியாவும் இலங்கையின் இறையாண்மை, ஒருமைபாட்டுக்கு ஊறு விளைவிக்கும் எந்த செயற்பாடுகளையும் இந்திய மண்ணில் இடம்பெற அனுமதிக்காது.
3. In the same spirit India will:
(i) Deport all Sri Lankan citizens who are found engaging in terrorist activities or advocating separatism or secessionism.
(ii) Provide training facilities and military supplies for Sri Lankan forces.
மேலே விவரித்துள்ள முழு வரலாற்று நிகழ்வுகளையும் இனி சுருக்கமாக பாருங்கள் .
• இந்த வரலாற்று நிகழ்வில் மறைந்துள்ள ராஜதந்திர/போரியல் நகர்வுகள்
• இலங்கையின் ‘Operation Liberation’ இராணுவ நடவடிக்கை புலிகளை முற்றாக அழித்தொழிக்கும் முயற்சியின் ஒரு பகுதி- போரியல் நகர்வு.
• அந்த இராணுவ நடவடிக்கை வெற்றி பெற்றால் இலங்கையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் வியூகம் செயலிழந்து போகும் என உணர்ந்த இந்தியா , மனிதாபிமான உதவி என்ற போர்வையில் அதை நிறுத்த முயல்வது - ராஜதந்திர நகர்வு
• அதை அனுமதிக்க மறுத்த இலங்கையிடம் தனது இராணுவ வல்லமையை காட்ட ஒபரேசன் பூமாலையை நடத்தியது- போரியல் நகர்வு
• அதன் மூலம் இலங்கையை , தனக்கு தேவையான சரத்துகளை கொண்ட ஒப்பந்தத்தில் கையொப்பமிடவைத்தது - ராஜதந்திர நகர்வு
• இலங்கையின் ஒருமைப்பாட்டை குலைக்க முயற்சிக்கும் எந்த போராளி குழுக்களும் இனி இந்திய மண்ணில் செயற்பட அனுமதிக்கப்படமாட்டாது என இந்திய அரசு கையெழுத்திட்டது தொலைநோக்கு பார்வையில் இலங்கைக்கு சாதகமானது - ராஜதந்திர நகர்வு.
( இது இலங்கைக்கு போரியல் ரீதியாக சாதகமானது. காரணம் தமிழ்நாடு போராட்ட இயக்கங்களின் பின்தளமாக இயங்குவது தடைபடும். )
• இந்தியாவின் ஒப்புதல் இன்றி இலங்கை அந்நிய இராணுவ உதவியை பெறமுடியாது / அதன் துறைமுகங்களை அந்நிய இராணுவ தேவைக்கு பயன்படுத்த முடியாது என்ற சரத்துகளை காலவோட்டத்தில் நீர்த்து போக வைத்தது இலங்கையின் ராஜதந்திர நகர்வு.
உதாரணம் இன்று இலங்கையின் அம்பாந்தோட்டையில் உள்ள சீனாவின் கடற்படை துறைமுகம் , இலங்கையின் அமெரிக்காவுடனான
Acquisition and Cross-Servicing Agreement (ACSA) எனும் பாதுகாப்பு ஒப்பந்தம் .
இவ்வளவு ராஜதந்திர , போரியல் நகர்வுகள் இந்த ஒற்றை வரலாற்று நிகழ்வில் உள்ளடங்கியிருக்கின்றன.
இரண்டு அரசுகளும் தங்களது நலன் சார்ந்து சாமர்த்தியமான புவிசார் அரசியல்/போரியல் சதுரங்க விளையாட்டை ஆடியிருக்கிறார்கள்.
ஆனால் மெத்த படித்த தமிழர்கள் ‘வானத்தை போல’ விஜயகாந்த்தை போல நெஞ்சு விம்ம கண்கள் குளமாக ‘என்னதான் இருந்தாலும் இந்தியா இரக்கத்தோடு உணவு பொதிகளை போட்டதுதானே ‘ என அந்த நிகழ்வை நினைவு கூறுகிறார்கள்.
க.ஜெயகாந்த்
0 கருத்துகள்