ஆசீவகம்

தமிழருக்கு மதம் என்று உண்டு எனில் அது சிவனியம் என்றாகிறது.. அதற்கும் முன்பு ஒரு வாழ்வியல்நெறியை தமிழர்கள் பின்பற்றி வந்தனர்..

அது சைவம்,யூதம்,இசுலாம் உள்பட பலசமயங்களின் மூலமாக இருந்தது..
ஆம்.. அதுவே 
ஆசீவகம்!!

முற்காலத்தே குமுகத்தில் பல்துறை வித்தகர்களாக விளங்கியவர்கள் ஆசீவகத்துறவிகள்.. அவர்கள் கற்படுகைகளை இருப்பிடமாகக் கொண்டிருந்தனர்..அங்கிருந்து மக்களுக்குத் தேவையான அறம் பலவற்றைப் போதித்தனர்..
இவர்கள் சாத்தன்,ஐயன், தீர்த்தவிடங்கர் என பலவாறு அழைக்கப்பட்டனர்..

ஆசீவகம் பெயர்க்காரணம்:
ஆசு+ஈவு+அகம்
அதாவது குறையைக்கேட்ட உடனே தங்கு தடையின்றி மடையுடைந்த வெள்ளமென, பிழையற்ற செம்மையான தீர்வுகளைத்
தருமிடம் என்பதே ஆசீவகமாகும்.
அதுவே அத்துறவிகளின் வாழிடத்தையும் குறிப்பதாயிற்று..

அறிவன்கூடம்:
காலநிலை மாற்றங்கள், கணியம், வானியல், மழைப்பொழிவு, வேளாண் பாதுகாப்பு, கல்வி, மருத்துவம், வணிகம் எனப் பல்துறைகளிலும் மக்களுக்குத் தேவையான ஈவுகளைஅளித்த ஆசீவகத்துறவிகள் அவற்றைப் பிறருக்குக் கற்றுத்தர கல்விச்சாலை அமைத்தனர்..

ஆசீவகத்தின் தோற்றம்:
சைவம் எப்படி திருமூலரால் அமைப்புவடிவம் செய்யப்பட்டதோ அதுபோல ஆசீவகமும் மற்கலிகோசரால் சமயக்கட்டமைப்பு செய்யப்பட்டது.
ஆனால் உண்மையில் ஆசீவக மெய்யியலை உலகிற்குத் தந்தவர் ஆதிநாதர் எனும் சிவனே!!

ஆசீவக மூவர்:
1.மற்கலி கோசாலர்
ஊர்: திருப்பிடவூர்
#விதிக்கோட்பாடு
2.கணிநந்தாசிரியர்
ஊர்: மாங்குளம்
#அணுக்கோட்பாடு
3.வெண்காசியப்பர்
ஊர்: மறுகால்தலை
#வினைக்கோட்பாடு
ஆசீவக மரபில் கழிவெண் பிறப்பைக் கடந்து வீடடைந்தவர்களில் இவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.

#விதிக்கோட்பாடு
எவ்வளவு முயன்றாலும் உளதாதலைப் போக்கவோ அல்லது இலதாதலை ஆக்கவோ இயலாது. அனைத்தும் வினைப்படி நிகழ்வதில்லை. நம்மிலும் மேலான பேராற்றல் குறித்து வைத்த விதி(அ) நியதிப்படியே எல்லாம் நடைபெறுகின்றன.

#அணுக்கோட்பாடு
எல்லாப்பொருட்களுமே நிலம்,நீர்,தீ,வளி,இன்பம்,துன்பம், உயிர் எனும் எழுவகை அணுக்களால் ஆனவை. 
அவ்வணுக்கள் ஒன்றிற்குள் ஒன்று நுழையாது. அதே போல் ஒரு அணு இரண்டாக பிரியவும் பிரியாது. ஆனால் அவை இணைந்து அணுத்திரளைகளாக (மூலக்கூறு) மாறமுடியும்.

#வினைக்கோட்பாடு
1.பேறு
2.இழப்பு
3.இடையூறு- உறுமிடத்து எய்துதல் 4.துக்கமுறுதல்- சுகமுறுதல் அவற்றினுடைய நீக்கம்
5.பிறத்தல்
6.சாதல் 
இவ்வாறும் தவிர்க்க இயலாதவை.
எனவே யாவும் கருமப்படி அல்லாது இயல்புப்படி நடப்பதால் மனிதன் அன்றாட வாழ்க்கையினை மகிழ்ச்சியாக வாழவேண்டும்.

#வீடுபேறு
ஆசீவகர்கள் உயிர்கள் வீடுபேறு அடைவதை இருவகையாகக் கொள்வர். 
1.செம்போதகநெறி
2.மண்டலநெறி 
செம்போதக நெறியடைந்த நல்லுயிர்கள் மீண்டும் உலகிற் பிறப்பு எய்தாதவர்கள்.
இவர்களே செம்போதகர்=ஐயனார் ஆவர்.
மண்டல நெறியில் உள்ளவர்கள் மீண்டும் உலகில் பிறப்பார்கள்.


#அறுவகை_நிறக்கோட்பாடு
ஆசீவகத்துறவியர் அவரவர் சிந்தனை,செயல்,ஊழ்கப் பயிற்சி,மெய்யியல் அறிவு இவற்றை அடிப்படையாகக் கொண்டு தனித்தனிநிறங்களால் குறிக்கப்பட்டனர்.இது ஒவ்வொரு உயிரும் ஆன்ம ஈடேற்றத்தில் எந்த படிநிலையில் உள்ளன என்பதைக் காட்டுவதாக இருந்தது..

1.கருமை
இரவு வானின் நிறம்
2.நீலம்
அதிகாலை ஞாயிறு உதிக்கும்முன் வானின் நிறம்
3.பசுமை
ஞாயிறு உதிக்கும்பொழுது இருக்கும் நிறம்
4.செம்மை
ஞாயிறு உதித்தபிறகு வானின் நிறம்
5.மஞ்சள்
ஞாயிறு உதித்தபிறகு ஞாயிற்றின் நிறம்
6.வெள்ளை
ஞாயிறு உச்சிக்கு வந்தபிறகு ஞாயிற்றின் நிறம்


ஆறுவகைகளுக்குள்ளும் மும்மூன்று உட்பிரிவுகள்:
படிநிலை உயரஉயர நிறத்தின் அழுத்தம் குறைந்துகொண்டே வரும்.
1. கரும்பிறப்பில்
அ.அடர்கருமை 18ஆம் படி 
ஆ.கருமை 17ஆம் படி
இ.சாம்பல் 16ஆம் படி

2. நீலப்பிறப்பில்
அ.கருநீலம் 15ஆம் படி
ஆ.நீலம் 14ஆம் படி
இ.வான்நிறம் 13ஆம் படி

3. பசும் பிறப்பில்
அ.அடர்பச்சை 12ஆம் படி
ஆ.பச்சை 11ஆம் படி
இ.வெளிர்பச்சை 10ஆம் படி

4. செம்பிறப்பில்
அ.செம்மை 9ஆம் படி
ஆ.இளம்சிவப்பு 8ஆம் படி
இ.காவி 7ஆம் படி

5. மஞ்சள் பிறப்பில்
அ.அடர் மஞ்சள் 6ஆம் படி
ஆ.இளமஞ்சள் 5ஆம் படி
இ.பொன்மை 4ஆம் படி

6. வெண் பிறப்பில்
3ஆம் படி, 2ஆம் படி,1ஆம் படி என மூன்றிலும் வெண்மையே.
இந்த 18 படிநிலைகளை கடந்த பின்னரே நல்வெள்ளை எனும் நிறமிலி நிலையினை அடைவர் என்பதே ஆசீவக நிறக்கோட்பாடு.


கருமையில் பிறவி துவங்கி அறியாமை இருளுடன் வாழ்வைத் துவங்கும் ஆசீவக மாணவன் தனது பயிற்சியினாலும் ஒழுக்கத்தினாலும் அறுநிறப் பதினெண் படிகளைக் கடந்து நிறமிலி நிலையினை அடைவதே ‘வீடுபேறடைதல்’ எனப்படும். அப்படி ஒளியடைதலே ஆசீவக மெய்யியலின் நோக்கம்..


வள்ளலார் ஏழு திரைகளைக் கடந்து, அருட்பெருஞ்சோதி ஆண்டவரைக் கண்டுள்ளார்..
இங்கு ஏழாவதாகச் சொல்லப்படும் கலப்புவண்ணம் குறிப்பது நிறமிலி நிலையே!!
ஆக வள்ளலாரும் ஆசீவக மரபினரே!!


கருப்பு - வீரன்- கருப்பசாமி-வேகம் என்ற நிலையிலிருந்து நல்வெள்ளை - துறவி - சாத்தன் - அமைதி என்ற நிலைக்கு இட்டுச்செல்லுதல்..
தலைகீழாகச் செய்தால் போர்க்கலை...

#ஆசீவகச்சின்னங்கள்


1.திருநிலை
இருபுறமும் நீரூற்றும் யானைகளும் இடையில் தாமரை மலர் மீதமர்ந்திருக்கும் பெண்ணுருவம்.
இவர் மாதங்கி (செல்வத்தை இல்லத்தில் தங்க வைப்பவர்) எனப்படுவார்.
தென்னகத்தமிழரின் வீட்டுவாயில்களிலும், மங்கலநாணின் கால்காசுகளிலும் இடம்பெற்றிருக்கும்.



2.சுழற்றியம்
மெய்யியலில் தேடல்நிலையின் இறுதியில் உள்ள துறவிகளுக்கான சின்னம் ஆகக் குறிக்கப்படுகிறது. மேலும் ஓகநெறியில் மூலாதாரச்சக்கரத்தில் உள்ள விநாயகர் என்னும் துவக்கநிலை கடவுளின் அடையாளச்சின்னமாகவும் கருதப்படுகிறது.



3.கந்தழி
ஒரு நடுவப்புள்ளியில் துவங்கி வலஞ்சுழியாக வரையப்படும் சுருள்வளைவு.
உலகியலைக் கடந்து மெய்ப் பொருளைத்தேடி அலையும் இயக்கநிலையினையும்  எல்லையின்றிப் பரந்து விரிந்து கிடக்கும் அண்டவெளியினுள் நிகழும் பல்வேறு தொடரியக்கங்களின் முடிவில்லா நிலையினையும் குறிப்பதாம்.



4.இருபுறமுத்தலைக்கோல்
குறியீட்டின் மேல்முனையிலுள்ள ‘ய’கரம்(சிவன்)உயிரைக் காத்தலையும்
கீழ்முனையில் தலைகீழாக உள்ள ‘ய’கரம்(கொற்றவை)தக்க காரணத்திற்காகத் தண்டிக்கும் கொலைக்கருவியாகவும் அறியப்படுகிறது.
வீட்டுவாயிலின் இருபுறமும் ஆண்டுதோறும் சுறவ முதல்நாளில் வரையப்படும்.



5.ஐம்முக்கோணம்
கொள்ளைநோய் காலத்தில் ஆசுமருத்துவர்களைக் கொண்டு மருத்துவம் செய்யப்படும் கொட்டிலில் வெளியிடத்திலிருந்து கொண்டுவரப்படும் கால்நடைகளை நோயச்சமின்றி அடைத்து வைக்கலாம் என்று தெரிவிக்கும் விதமாக ஐந்து 🔺கள் ஒரு நேர்வரிசையில் வரையப்படும்(கோமாற்றி எழுதுதல்)


6.முப்புள்ளி
மொழிநூலில் அகரமே உயிர் எழுத்துக்களின் ஆதியாகவும், இயக்கமற்ற மெய்யெழுத்துக்கள் யாவும் உகர ஒலிக்குறிப்புடன் ஊர்ந்து ஒலிக்கப்படுவனவாகவும் உள்ளன.
ஆக அகர உகரத் தொடர்பே மொழி, அசைவு,இயக்கம் ஆகியவற்றுக்கு அடிப்படையாய் உள்ளதால் இச்சின்னம் மிகச்சிறப்புடையது.


நடுவில் உள்ள முப்புள்ளி ஞானம் கூடும்நிலையினை அதாவது இயல்பான இருகண்களுடன் மூன்றாவதாக அறிவுக்கண் பெறும் நிலையினைக் குறிக்கும். எனவே, இது தனிநிலை எனப்பட்டது.
எதனையும் எழுதத்துவங்கும் முன் ஓலைகளில் அஃஉ என பதித்தபின்பே எழுதும் முறை உண்டு. தற்போது உகரமாக குறுகிவிட்டது.

7.புள் நகக்கீற்று
இது பறவையின் நகத்தினால் கீறப்பட்ட தடம் போன்ற சின்னம்.
ஆசீவகத்துறவிகளின் ஆய்விடங்களுக்கு அருகில் இருந்த கற்பாறைகளில் இவை வரையப்பட்டிருக்கும்.