இந்திய தேசியம் இலக்கை அடையுமா?
தேசம் :- குறிப்பிட்ட ஒரு மொழி தாய்மொழியாக கொண்ட மக்கள் கூட்டம் அல்லது ஒருமொழியை பேச்சுமொழியாக ஏற்றுக்கொண்ட மக்கள் கூட்டம் எனலாம்.
1947ல் பிரித்தானியாவிடமிருந்து விடுதலை பெற்ற இந்தியா என்னும் நாடு பல்வேறு இனமக்கள், பல்வேறு மொழிமக்கள் மற்றும் பல்வேறு கலாச்சார மக்கள் வாழும் முரண்பாடுகளின் தொகுப்பாக உருவானது.
இம் முரண்பாடுகளை களைந்து இந்தியாவை ஒற்றை தேசமாக கட்டமைக்க முடியும் என்பதை இந்தியாவின் தலைவர்களாக கருதப்பட்ட நேரு, காந்தி உள்ளிட்டோர் நம்பினார்கள். குறிப்பாக காந்தியை எடுத்துக்கொண்டால் 1900களில் இந்தி பிரச்சார சாபாவை பல இடங்களில் துவங்கினார், வங்காளிகள் 3மாதம் முயன்றால் இந்தி கற்கலாம், தென்னிந்தியர்கள் 6மாதம் முயன்றால் இந்தி கற்கலாம் என தெருத்தெருவாக பேசத்தொடங்கினார்.
இந்தியாவுக்கு என்று ஒரு பொது தேசிய மொழி வேண்டும் அம்மொழி இந்தியாவின் பெரும்பான்மை மக்களால் பேசப்படவேண்டும், எளிதில் கற்பதாக இருக்க வேண்டும், ஆங்கிலத்துக்கு மாற்றாக இருக்க வேண்டும் என முழங்கினார். தன் தாய்மொழியான குசராத்தியை ஒத்த இந்தியை இந்தியாவின் தேசியமொழியாக்க முனைந்தார். "தேசியமொழி இல்லா தேசம் ஊமைகளது" என கூறினார்.
காந்தியின் வழியை நேரு பின்பற்றினார் இந்தியாவின் ஒற்றை அலுவல்மொழியாக இந்தியை அறிவிக்க போவதாக கூறினார். தமிழ்நாட்டில் போராட்டங்கள் பல எதிர்ப்பு இறுதியில் ஆங்கிலமும் தொடரும் என அறிவித்தார். ஏன் இந்தியை இந்தியாவின் ஒற்றை தேசியமொழியாக்க வேண்டும்?
உங்கள் முன் இருப்பது பல இனங்கள் இவைகள் வரலாற்றால் முரண்பட்டவை, தங்களுக்கான மொழி பண்பாடு கலாச்சாரம் என அனைத்தையும் கொண்டுள்ளவை. இந்த பல இனங்களை அப்படியே வைத்துக்கொண்டு இந்தியாவின் இறையாண்மையை காப்பாற்ற இயலுமா?
இயலாது என்பதே பதில். அப்படியென்றால் இந்தியாவின் இறையாண்மையை காக்க என்ன செய்ய வேண்டும்? அனைத்து நாடுகளும் பின்பற்றும் ஒரே கொள்கை "ஒற்றைமயமாக்கல்/ஓர்மைபடுத்துதல்". இந்த மக்கள் கூட்டத்தை ஓர்மைபடுத்த பொதுபண்பு தேவை அந்த பொதுபண்பு பெரும்பாலும் பெரும்பான்மை இனத்தவரின் அடையாளமாகவே இருக்கும். அதன் அடிப்படையில் இந்தியா தனது ஒற்றைமயமாக்கலை பொதுமொழி/தேசியமொழி என்ற சொல்லாடல்களின் மூலம் நிறுவ முனைப்பு காட்டியது. அவர்கள் முன் பெரும்பான்மை மக்களின் மொழியான இந்தி இருந்தது.
ஆளும் வர்கமான பிராமணர்கள் பெரும்பான்மை இந்தி பேசும் மக்களின் குரலாக மாறினர். இந்தியை இந்தியாவின் ஒற்றை மொழியாக்குவதன் மூலம் பிறமொழிகளை அழித்து இந்தியாவை ஒரு தேசமாக்கிவிடலாம் என எண்ணினர்.
ஆனால் நடந்ததோ!
இந்தியாவின் பல மாநிலங்கள் இதை ஏற்றுக்கொள்ளவில்லை, ஆங்கிலத்தின் தாக்கத்தால் பிராந்திய மொழிகள் வலு குறைந்தாலும் இந்தியை பொதுமொழியாக ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு மக்கள் வரவில்லை. மாறாக இந்தியை ஏற்றுக்கொண்ட மிதிலை(மைதிலி) மக்கள் 2001ல் தங்கள் மொழிக்கும் இந்திக்கும் தொடர்பில்லை எங்கள் மொழியை 8 வது அட்டவணையில் சேர்க்கவேண்டும் என போராடி வெற்றியும் பெற்றனர்.
ராசசுத்தானி மொழி இந்தியிலிருந்து வேறுபட்டது, இந்தியை போன்று ராசசுத்தானிக்கும் மார்வாரி உள்ளிட்ட வட்டார வழக்குகளும் உண்டு எனவும் எங்கள் மொழியையும் 8 வது அட்டவணையில் சேருங்கள் எனவும் ராசசுத்தான் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி இந்திய அரசுக்கு அனுப்பியுள்ளனர்.
2020 ஆகத்ட் 15 அன்று சட்டீச்சுகட் முதலமைச்சர் இந்திய பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் சட்டீச்சுகட் மொழியை எங்கள் மாநிலத்தின் பெரும்பான்மை மக்கள் பேசுகிறோம், நவம்பர் 30 சட்டீச்சுகட் மொழி நாள் கொண்டாடிவருகிறோம். எங்கள் மொழியை 8வது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
மேற்கண்ட மூன்று உதாரணங்கள் நமக்கு உணர்த்துவது என்ன?
இந்தி என்று நாம் நம்பிக்கொண்டிருக்கும் 43% பேர் பேசுவதாக சொல்லப்படும் மொழிக்குள்ளும் சிக்கல்கள் உள்ளது. அந்த சிக்கல்கள் வெளிவர துவங்கிவிட்டது என்பது தான், மேலும் மாயாவதி கூறியதுபோல் ஆவத் பிரதேஷ், புத்வாஞ்சல், புந்தல்காண்ட் மாநிலங்கள் உருவாக்கப்பட்டால் அம்மொழிகளும் வளரும் மைதிலி,ராசசுத்தானி,சட்டீசுகரி போன்று தனிமொழி கோசம் எழுப்பும்.
இந்தி மொழியால் ஆக்கிரமிக்கப்பட்ட மக்களே இந்தியிலிருந்து வெளியேற எத்தணிக்கும் இந்த காலகட்டத்தில் நம்மிடம் இந்தி படியுங்கள் என சொல்பவர்களை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது.
இந்திய தேசியம் ஒரு நாளும் தனது இலக்கான 'இந்தியதேசம்' என்பதை அடைய இயலாது.
0 கருத்துகள்