தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களுக்கு 39கோடி செலவில் பிரம்மாண்ட நினைவு சின்னம் மற்றும் மண்டபம் கட்டப்போவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டின் கடன்சுமை 5இலட்சம் கோடியை நெருங்கிவரும் இந்த நேரத்தில் 39கோடி செலவில் இது தேவையா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. மேலும் கீழடி அகழாய்வுக்கு 5கோடி மட்டுமே ஒதுக்கியுள்ள நிலையில் குமரிக்கண்ட ஆய்வு நிலுவையில் உள்ள நிலையில் முன்னாள் முதல்வரின் நினைவு மண்டபத்துக்கு 39கோடி ஒதுக்கியிருப்பது கண்டனத்துக்குரியது.
ஏற்கனவே கடந்த அதிமுக அரசு எம்.சி.ஆர் நூற்றாண்டு விழா மற்றும் செல்வி செயலளிதா நினைவு மண்டபம் என செலவு செய்யும் போது கடுமையாக விமர்சித்தவர்கள் இதே திமுக தான். ஆனால் இப்போது அவர்கள் தேவையற்ற செலவுகளை செய்கிறார்கள்.
தன்னுடைய வாழ்வை முழுக்கமுழுக்க திராவிட இனத்தவரின் முன்னேற்றத்திற்காக செலவிட்ட மு.கருணாநிதி அவர்களை தமிழ்நாடு முதல்வர் திரு.சுடாலின் அவர்கள் "தமிழின தலைவர்" என கூறியிருப்பது அதிர்ச்சியாக உள்ளது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம். தமிழினத்துக்கு தமிழரசன், பிரபாகரன், காமராசர், கக்கன், இரட்டைமலை சீனிவாசன், முத்துராமலிங்க தேவர், வா.உ.சிதம்பரம் பிள்ளை என எண்ணற்ற தலைவர்கள் உள்ளனர் என்பதை திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான திரு.மு.க.சுடாலின் புரிந்து கொள்ள வேண்டும்.
தலைநகரில் அதுவும் சுற்றிலாதளமான மெரினா கடற்கரையில் தலைவர்களுக்கு நினைவு மண்டபங்கள் எழுப்புவது நாகரீகமான செயலாக தோன்றவில்லை. ஆட்சி கையில் இருப்பதால் திராவிட அரசுகள் தொடர்ந்து இந்த தவறை செய்துவருவதை தமிழ்த் தேய அவையம் வன்மையாக கண்டிக்கிறது.
0 கருத்துகள்