• தமிழ் தேசியம் எனும் பொது இலக்கும் அதன் அடுக்குகளும்
• தமிழ்தேசியம் என்பது என்ன?
தமிழ்நாடு எனும் நிலப்பரப்பில், வரலாற்றுரீதியாக தொடர்ச்சியாக வாழ்ந்துவரும் தமிழர் எனும் இனம் தனக்கென இறையாண்மையுள்ள ஒரு அரசை இந்த உலக ஒழுங்கில் அமைத்து கொள்வதற்கான அரசியல் கருத்தியல்தான் தமிழ்தேசியம்.
• ஒரு இறையாண்மை அரசை உலக ஒழுங்கில் நிறுவுவது எளிதானதா?
மிக கடினமானது. உலக ஒழுங்கில் புதிதாக ஒரு இறையாண்மை அரசை அமைப்பது என்பது பெரும் விலை கொடுத்தால்தான் அதை அடையமுடியும்.
இன்று ஐக்கிய நாட்டு சபையில் இருக்கும் சகல இறையாண்மையுள்ள அரசுகளும் தங்களது வரலாற்றில் ஏதோ ஒரு கட்டத்தில் அந்த பெரும் விலையை கொடுத்துதான், இன்று நீங்கள் காணும் இறையாண்மையுள்ள அரசுகளாக மாறினார்கள்.
• இறையாண்மை அரசை அடைவதற்கான வழிகள் என்ன?
அதை பின்வருமாறு சுருக்கமாக கூறமுடியும்.
ஆள்பவர் இனிமேல் உங்களை அடக்கி வைக்ககூடிய மனித வளமோ, பொருளாதார வளமோ தன்னிடம் இல்லை என்ற நிலைக்கு தள்ளப்படும்போதே, இறையாண்மையுள்ள அரசுகள் பிரசவமாகின்றன. அந்த நிலைக்கு ஆள்பவரை தள்ள மென்முறையையும் நீங்கள் பயன்படுத்தலாம் அல்லது வன்முறையிலான ஆயுதப்போராட்டத்தையும் பயன்படுத்தலாம்.
#ஆனால் அந்த இக்கட்டான நிலைக்கு ஆள்பவரை தள்ளவேண்டும் என்பதுதான் அடிப்படை.
• இந்திய ஒன்றிய அரசு, தமிழ்நாடு எனும் புதிதான இறையாண்மை அரசை அமைக்க அனுமதிக்குமா?
நிச்சயம் அனுமதிக்காது. மீண்டும் மேலே சொன்ன அந்த அடிப்படை நிபந்தனையை நீங்கள் நிறைவேற்றியாக வேண்டும்.
“ஆள்பவர் இனிமேல் உங்களை அடக்கி வைக்ககூடிய மனித வளமோ, பொருளாதார வளமோ தன்னிடம் இல்லை என்ற நிலைக்கு தள்ளப்படுதல்”
ஆக இங்கே ஆள்பவர் இந்திய ஒன்றிய அரசு.
ஆளப்படுபவர் தமிழ்நாடு.
• மேலே இதுவரை சொன்னவற்றின் சாராம்சம்.
தமிழ்தேசியம் என்பது உலக ஒழுங்கில் இறையாண்மையுள்ள அரசை நிறுவுவது.
அதை நிறுவுவது மிக கடினம்.அதை பெரும் விலை கொடுத்தே அடையமுடியும்.
அதற்கு ‘ஆள்பவர் இனிமேல் உங்களை அடக்கி வைக்ககூடிய மனித வளமோ, பொருளாதார வளமோ தன்னிடம் இல்லை என்ற நிலைக்கு தள்ளப்படும்பொழுதே’ இறையாண்மையுள்ள அரசுகள் பிரசவமாகின்றன.
• இனி இந்த தமிழ்தேசியத்தின் அடிப்படை இலக்கை அடைய முயன்றவர்களை பார்ப்போம்.
இவர்களை மூன்று அடுக்குகளாக பிரிக்கமுடியும்.
1. #உச்ச அடுக்கு
இந்த அடுக்கில் வருபவர்கள்தான் ஒரு இறையாண்மை அரசை உலக ஒழுங்கில் உருவாக்குவதற்கான அடிப்படை நிபந்தனையை நிறைவேற்ற முயன்றவர்கள்.
தலைவர் பிரபாகரன் இந்த உச்ச அடுக்கிலே வருபவர்.
விடுதலைபுலிகளை அடக்கி வைக்கக்கூடிய பொருளாதார வளமோ, மனித வளமோ தம்மிடம் இல்லை என்ற நிலைக்கு இலங்கை அரசை தள்ளியவர்.
அதன் பின்னர் புவிசார் அரசியல் சதுரங்க ஆட்டத்தின் ஒரு பகுதியாக, மேற்குலகும் பிராந்திய வல்லரசுகளும் இலங்கைக்கு ஆதரவாக திரண்டு விடுதலை புலிகளை அழிக்க உதவினர்.
அத்துடன் இந்த உச்ச அடுக்கிலே வருபவர்கள் இலக்கை அடைவதற்காக தங்களது உயிரையும் தியாகம் செய்வதற்கு தயாராக இருப்பார்கள்.
தோழர் தமிழரசனும் இந்த உச்ச அடுக்கிலேதான் வருவார். ஆனால் அவர் இந்திய ஒன்றிய அரசை ‘மனித வளமோ, பொருளாதார வளமோ தன்னிடம் இல்லை என்ற நிலைக்கு தள்ளவில்லை’. ஆயினும் அதை நோக்கிய பயணம்தான் அவரது போராட்ட வாழ்க்கை. அந்த நோக்கத்திற்காக அவரது உயிரையும் ஈந்தார்.
ஆக இந்த உச்ச அடுக்கிலே வரவேண்டும் எனில் தெளிவாக அந்த அடிப்படை நிபந்தனையை நோக்கி பயணம் செய்யவேண்டும்.
மகாத்மா காந்தி கூட, இனி அடக்கி வைக்கக்கூடிய மனித வளமோ, பொருளாதார வளமோ இல்லை என்ற நிலையை பிரிட்டிஷாருக்கு உருவாக்கத்தான் முயன்றார்.
அத்துடன் அதை அடைவதற்காக உயிரையும் துறப்பதற்கு தயாராக இருந்தார்.
இந்த உச்ச அடுக்கிலே இருப்பவர்களை ஒரு அரசு தனக்கான நேரடி அச்சுறுத்தலாக கருதும்.
2. #இரண்டாம் அடுக்கு
இந்த அடுக்கிலே வருபவர்கள் இறையாண்மை அரசு அமைவதற்கான அடிப்படை நிபந்தனையை நோக்கி பயணம் செய்யமாட்டார்கள்.
ஆனால் அந்த இலக்கை நோக்கி பயணம் செய்யக்கூடிய மனித ஆளுமைகள் உருவாவதற்கான புற சூழ்நிலையை சமூகத்தில் ஏற்படுத்துவார்கள்.
குறைந்தபட்சம் தமிழ்தேசிய கருத்தியல் உயிர்ப்புடன்,பேசு பொருளாக இருப்பதற்கான புறசூழலையாவது உருவாக்குவார்கள்.
ஆனால் இவர்களால் ஒரு அரசுக்கு நேரடி அச்சுறுத்தல் என்று எதுவும் இல்லை.
அத்துடன் ஒரு அரசு தனது குடிமகனுக்கு வழங்கிய சுதந்திரத்தையே தனக்கான கவசமாக வைத்துகொண்டு அந்த புறசூழ்நிலையை உருவாக்குவார்கள்.அதனால் ஒரு அரசால் நேரடியாக இவர்களை தண்டிக்கமுடியாது.
ஆனால் அதேநேரம் இவர்கள் பரப்பும் தமிழ்தேசிய கருத்தியலை எதிர்கொள்ள இந்தியதேசிய கருத்தியலை கொண்டவர்களை அரசு ஊக்குவிக்கும்.
இந்திய அரசின் assimilation செயற்திட்டத்தின் மூலம், அதிகரித்துவரும் இந்திய தேசிய கருத்தியல் எண்ணிக்கையை கொண்டு தமிழ்தேசிய கருத்தியலை நீர்த்து போக வைக்கலாம் என்ற கணக்கில் இந்திய ஒன்றிய அரசு செயல்படும்.
இந்த இரண்டாம் அடுக்கிலே வருபவர்கள் தங்களது உயிரை தியாகம் செய்யவேண்டிய தேவையும் இங்கே எழுவதில்லை.அதனால் நாம் இந்த அடுக்கிலே இருப்பவர்களை நோக்கி இது தொடர்பாக கேள்வி எழுப்பவேண்டியதில்லை.
இந்த இரண்டாம் அடுக்கிலே இருப்பவர்கள் அனேகமாக தங்களது வாழ்நாளில் பெரும்பாலான காலத்தை இந்த புறச்சூழலை உருவாக்கும் நோக்ககத்திற்காக ஒதுக்கியும் இருப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த இரண்டாம் அடுக்கிலே வருபவர்களை அதனது உள்ளார்ந்த தன்மையை கொண்டு இரண்டாக பிரிக்கலாம்.
a) தேர்தல் அரசியலின் சமரச நிர்ப்பந்தங்களை மனதில் கொண்டு, அதனால் அதிலிருந்து விலகியிருப்பவர்கள். இவர்கள் தமிழ்தேசியத்தின் கருத்தியலை தமது செயற்பாடுகள் மூலமாக வெகுஜன மக்களுக்கு கொண்டு சென்றுகொண்டே இருப்பார்கள்.
சமரசம் செய்யக்கூடாது என்று தீர்மானமாக இவர்கள் இருப்பதால் இவர்களது கருத்தியல் மிக கூர்மையானதாக இருக்கும். மிகவும் தெளிவானதாகவும் இருக்கும். இது மிக முக்கியமான உள்ளார்ந்த பண்பு.
இந்திய ஒன்றியத்தின் மாநில அரசு என்பது வெறும் கங்காணி அரசு என்ற கொள்கையை உடையவர்கள்.
தமிழ்தேசிய பேரியக்கத்தின் தலைவர் மணியரசன் இந்த இரண்டாம் அடுக்கின் a) பிரிவை சேர்ந்தவர்.
b) இவர்கள் தேர்தல் அரசியலின் சமரசங்களை ஏற்றுகொண்டு நெகிழ்வுதன்மையுடன் பயணிப்பவர்கள்.
இவர்களின் தமிழ்தேசிய கருத்தியலும் சில சமரசங்களை செய்திருக்கும்.
ஆனால் இரண்டாம் அடுக்கிலுள்ள முதல் பிரிவு புறந்தள்ளிய கங்காணி அரசையாவது கைப்பற்றுவது முக்கியம் என்று கருதுபவர்கள்.
இதை பற்றி ‘தமிழ்தேசிய குறுங்கால குறுகிய தூர இலக்கு’ என்று முன்பொரு பதிவு எழுதியிருக்கிறேன். அதன் இணைப்பு கீழே.
இவர்கள் தேர்தல் அரசியலில் இருப்பதால், இவர்களை ஆதரிப்பவர்கள் அனைவருமே தமிழ்தேசிய கருத்தியலை ஏற்றுக்கொண்டவர்கள் என்று அர்த்தம் இல்லை.
நாம் தமிழர் கட்சியின் சீமான் இந்த இரண்டாம் அடுக்கின் b) பிரிவை சேர்ந்தவர்.
உதாரணத்திற்கு கடந்த சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி கிட்டத்தட்ட 30 லட்சம் வாக்குகளை பெற்றிருந்தது.
இவர்கள் அனைவருமே தமிழ்தேசிய கருத்தியலை உள்வாங்கிதான் வாக்களித்தார்கள் என்று பொருள் கொள்ளமுடியாது.
இரண்டு திராவிட கட்சிகளின் ஊழலை வெறுத்து சிலர் வாக்களித்திருக்கலாம். நாதக சூழலியலிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்திற்கு சிலர் வாக்களித்திருக்கலாம். இவர்களில் இந்தியா எனும் ஒற்றை நாட்டை விரும்புபவர்கள் கூட இருக்கலாம்.
ஆனால் நாம் தமிழர் கட்சி தேர்தல் அரசியலில் இருப்பதால், இவர்களால் பெரும் எண்ணிக்கையிலான மக்களை சென்றடையகூடிய வலிமை உருவாகிறது. இதனால் பெரும்பாலான சாமானியர்களுக்கு தமிழ்தேசிய கருத்தியலை அறிமுகப்படுத்தமுடியும்.
இன்று தமிழ் நாட்டின் தேர்தல் களத்தில் திராவிடம் என்ற சொல்லாடலுக்கு சம வலிமை உள்ள சொல்லாடராக தமிழ்தேசியம் இருப்பதன் காரணம் நாம் தமிழர் கட்சியில் தேர்தல் அரசியல் பங்குபற்றுதலே.
அத்துடன் அந்த கங்காணி அரசையாவது தமிழ்தேசிய கருத்தியலை கொண்ட கட்சி கைப்பற்ற முடியும். இன்னொரு திராவிட கட்சியிடம் சின்ன சின்ன கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள் என கெஞ்சி கொண்டிருக்க தேவையில்லை.
ஆனால் மறுபடியும் ஞாகபமூட்டுகிறேன்.
இந்த இரண்டாம் அடுக்கில் உள்ளவர்களால் இந்திய ஒன்றிய அரசை ‘மனித வளமோ, பொருளாதார வளமோ தன்னிடம் இல்லை’ என்ற நிலைக்கு தள்ளமுடியாது.
ஆனால் முன்பு கூறிய புறசூழலை உருவாக்குவார்கள். குறைந்த பட்சம் தமிழ்தேசியம் என்ற கருத்தியலை உயிர்ப்புடன் வைத்திருப்பார்கள்.
3. #மூன்றாவது அடுக்கு
இது உங்களை போன்ற தமிழ் உணர்வாளர்கள்.
இவர்கள் முழு வாழ்க்கையையும் இதற்காகவே அர்ப்பணித்து இருக்கமாட்டார்கள். ஆனால் கிடைக்கும் நேரங்களில் ஏதாவது ஒரு வெளியில் தமிழ்தேசிய கருத்தியலை பேசுபவர்கள். பரப்புபவர்கள்.
இந்த மூன்று அடுக்கில் உள்ளவர்களுமே தமிழ்தேசிய கருத்தியலை உள்வாங்கி கொண்டவர்கள்தான். ஆனால் அவர்களின் இலக்கு,அர்ப்பணிப்பை பொறுத்து மூன்று அடுக்குகள் உருவாகின்றது.
இந்த அடுக்குகளையும், அதனது உள்ளார்ந்த தன்மையையும் புரிந்து கொண்டால் ஒருவர் மற்ற அடுக்கில் உள்ளவர் மீது புரிதலற்ற குற்றச்சாட்டுகளை வைக்கவேண்டிய தேவை வராது.
எல்லோரும் பொது இலக்கை நோக்கி நகரலாம்.
க.ஜெயகாந்த்
முகநூல்
0 கருத்துகள்